பூந்தமல்லி தடுப்புவதை முகாமுக்குக் கொண்டுவந்து தள்ளப்பட்ட நாளான செப்டம்பர் 17ம் நாளிலிருந்து மீண்டும் அதே கோரிக்கையை முன்வைத்து நீரும் அருந்தாது பட்டினிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார் செந்தூரன். அவரது போராட்டம் இன்று ஆறாவது நாளாகத் தொடர்கிறது .
தமிழகத்தில் பூந்தமல்லி தடுப்பு முகாமில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் செந்தூரன், ‘பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் உள்ள உறவுகள் அனைவரும் திறந்தவெளி முகாமிற்கு மாற்றப்பட்டு தங்களது குடும்பங்களுடன் இணைந்து வாழ அனுமதிக்க வேண்டும் ‘ என்ற கோரிக்கையை முன்வைத்து ஆகஸ்டு 06ம் நாள் அன்று உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார் என்பது அறிந்ததே.
ஆகஸ்ட் 06ம் நாள் முதற்கொண்டு ஆகஸ்ட் 20ம் நாள் வரையான 16 நாட்கள் தொடர்ந்த இந்த உண்ணாநிலைப் போராட்டத்தின் போது செந்தூரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எதற்கும் தமிழக அரசு செவிசாய்க்காத நிலையில், 20ஆம் நாள் முதல், நீரும் அருந்தாது தனது பட்டினிப் போராட்டத்தை தீவிரப்படுத்தினார் செந்தூரன்.
10 நாட்களாக நீரும் அருந்தாது பட்டினிப் போராட்டத்தை அவர் தொடர்ந்த நிலையில், ஆகஸ்ட் 31ம் நாள் அன்று இரவு 8 மணியளவில் மயங்கிய நிலையில் இருந்த செந்தூரனை – அவரது அறப்போராட்டத்தை.. இழிவுபடுத்தி, ‘தற்கொலைக்கு முயன்றார்’ என்ற கூசாமல் குற்றம் சுமத்தி ‘புழல்’ சிறைச்சாலையில் அடைத்தது தமிழகக் காவல்துறை.
புழல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட செந்தூரனுக்கு, சிறைவாசிகள் அனைவரும் திரண்டு வந்து தமது முழு ஆதரவையும் உறுதியையும் வழங்கினர்.
சிறைவாசிகள் உணர்ச்சி வசப்பட்டு, கொந்தளிப்பு நிலையில் காணப்பட்டதால் சிறைக்குள்ளேயே வன்முறை வெடிக்கும் சாத்தியக்கூறுகள் தென்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் உண்ணாநிலைப் போராட்டம், வன்முறைப் போராட்டமாக மாறிவிடக்கூடாது, இதன் நிமித்தம் உயிரிழப்புகள் ஏதேனும் வந்துவிடக்கூடாது என்ற வகையில் செந்தூரனது பட்டினிப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
ஆயினும் அவர் தொடர்ந்து ‘புழல்’ சிறைச்சாலையிலேயே ‘தற்கொலைக்கு முயன்றார்’ என்ற குற்றச்சாட்டின் பேரில் அடைக்கப்பட்டிருந்தார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தூரனைப் பார்க்க வழக்கறிஞர்கள் தவிர்ந்த யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் செப்டம்பர் 17ஆம் நாள் இரவு 9:00 மணிக்கு புழல் சிறையில் இருந்த செந்தூரன் ‘பிணையில்’ விடுவிக்கப்பட்டார். பிணையில் விடுவிக்கப்பட்ட அவரை மீண்டும் பூந்தமல்லி தடுப்பு வதைமுகாமில் கொண்டுவந்து அடைத்தது காவல்துறை.
பூந்தமல்லி தடுப்பு வதை முகாமுக்குக் கொண்டுவந்து தள்ளப்பட்ட நாளான செப்டம்பர் 17ம் நாளிலிருந்து மீண்டும் அதே கோரிக்கையை முன்வைத்து நீரும் அருந்தாது பட்டினிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார் செந்தூரன். இன்று ஆறாவது நாளாகத் தொடர்கிறது.
செந்தூரனின் போராட்டத்திற்கு ஆதரவாக இம்முறை திமுகவின் தலைவர் கருணாநிதியும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே திரு வைகோ, சீமான், திருமாவளன் ஆகியோர்கள் அறிக்கை விடுத்து பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுயிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
தந்தை பெரியார் திராவிடக் கழகம் முற்றுகை போராட்டம் நடத்தியது. தமிழ் உணர்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் அரசுக்கு செந்தூரனின் கோரிக்கையை ஏற்குமாறு அரசுக்கு வேண்டுகோள் வைத்தனர்.
ஆனால் எதையுமே தமிழக அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை . செந்தூரனை பற்றி தமிழக முதல்வர் இதுவரை வாய் திறக்கவில்லை. இது தமிழர்களிடையே பெரும் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
உண்மையில் சிறப்பு முகாமிற்கு பொறுப்புதாரி யார் என்ற கேள்வி எழுத்துள்ளது. யார் இந்த சிறப்பு முகாம்களை நிர்வாகம் செய்கிறார்கள்? யாருடைய கட்டுப்பாட்டில் இது இயங்குகிறது? மத்திய அரசா , மாநில அரசா அல்லது உளவுப் பிரிவா? எதனால் தமிழக அரசு இவ்வளவு அழுத்தங்களுக்கு பிறகும் செந்தூரனை குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று தெரியவில்லை.
செந்தூரன் மற்றும் முகாமில் உள்ள தமிழர்களின் விடுதலையை தடுப்பவர் யார் என்று கேள்வியும் இப்போது தமிழ் உணர்வாளர்கள் நடுவே எழுந்துள்ளது. ஏற்கனவே தமிழர் நலன் சார்ந்த கட்சிகள் அனைத்தும் போராட்டம் நடத்தி முடித்துவிட்ட நிலையில், மேலும் இந்த கட்சிகள் இதற்காக போராட்டம் நடத்துமா எனத் தெரியவில்லை.
அதனால் தமிழக அரசு தான் இனி இதற்கான விடையை கொடுக்க வேண்டும். தமிழக மக்களும் அதைத் தான் எதிர்பார்க்கின்றனர். இம்முறை செந்தூரனின் போராட்டம் வெற்றி பெறுவது அரசின் கைகளின் தான் உள்ளது.






Comments
Powered by Facebook Comments