நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தேர்தல் ஆணையத்தின் புதிய நியமனங்கள்…
…குறித்து ஊடக அறிக்கையொன்றினை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம்:
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினராக அவுஸ்திரேலியாவில் சிட்னி நகரில் வசித்துவரும் திரு. சுப்பையா ஸ்கந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதனையும், திருமதி செல்வநாயகி சிறீதாஸ் அவர்கள் தேர்தல் முதன்மை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதனையும் தங்கள் அனைவருக்கும் அறியத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
திரு. சுப்பையா ஸ்கந்தகுமார் பொறியியல் துறையைத் தனது தொழிலாகக் கொண்டுள்ளார். அத்துறையில் 30 ஆண்டு கால அனுபவம் உள்ளவர். இவர் அதில் 20 ஆண்டுகள் வரை அவுஸ்திரேலியா நாட்டில் கடமையாற்றியுள்ளார்.
திரு. ஸ்கந்தகுமார் நாடுகடந்த தமிழீழ அரசின் நல்லதோர் ஆதரவாளன் மட்டுமன்றி,தான் வாழும் நாட்டில் பல தமிழ் அமைப்புக்களில் பொறுப்பான பதவிகளை வகித்து வருகின்றார்.
அவுஸ்திரேலியா சிட்னி நகரில் நீண்டகாலமாக இயங்கிவரும் ஈழத் தமிழ்ச் சங்கம், தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் என்பன அவற்றில் சிலவாகும்.
மேலும், நாடுகடந்த தமிழீழ அரசினால் அவுஸ்திரேலியாவில் முன்னர் நடாத்தப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசுக்கான இடைத் தேர்தலின் போது இவர் தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவராகக் செயலாற்றியுள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களின் விபரம் பின்வருமாறு.
1. திருமதி. செல்வநாயகிசிறீதாஸ் (அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்)
2. திரு. விஜயசிங்கம் (முன்னைநாள் அரசியல் கட்சி ஆலோசகர்)
3. திரு. சுப்பையா ஸ்கந்தகுமார் (கட்டடப் பொறியாளர்)
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்படும் சகல தேர்தல்களுக்கும் யாப்பில் குறிப்பிட்டுள்ளபடி தேர்தல் ஆணையமே முற்றுமுழுதாக பொறுப்பானதாகவிருக்கும். அத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல்கள் பற்றிய முறைப்பாடுகளை ஏற்றுத் தீர்ப்பு வழங்குவதற்கும் இத்தேர்தல் ஆணையமே பொறுப்பானதாகவிருக்கும்.
பொதுமக்கள் எவராயினும் தேர்தல் ஆணையத்தை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல்: election.commission@tgte.org இவ்வாறு அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






Comments
Powered by Facebook Comments