Thursday June 20th 2013

Archives

உலகத் தமிழர்களின் நலன்களுக்காக குரல்கொடுக்கின்ற அரசாக தமிழீழம் அமையும்: வி.உருத்திரகுமாரன்

நாளை மலரப்போகும் தமிழீழ அரசானது, உலகத் தமிழர்களின் நலன்களுக்காக குரல்கொடுக்கப் போகின்ற அரசாக அமையும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் வெள்ளிவிழா நிகழ்வில் ஆற்றிய உரையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் பங்கெடுத்து உலகத் தமிழர்களை நோக்கிய ஈழத்தமிழர்களின் நிலைப்பாட்டினை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் எடுத்துரைத்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்காலில் ஈழவிடுதலைப் போராட்டம் முடங்கவில்லை. மாறாக புலம்பெயர் தமிழர்களை மட்டுமல்லாது, உலகத் தமிழர்களையும் ஈழவிடுதலைக்கான போராளிகளாக மாற்றியுள்ளதோடு, இலங்கைத் தீவினையும் தாண்டி, உலகத் தமிழர் தேசங்களையும் போராட்டகளமாக மாற்றியுள்ளது.

அரபுலகில் மக்கள் எழுச்சியின் வடிவமாக எழுந்த அரபுவசந்தம், ஐக்கிய நாடுகள் சபையினையும் சர்வதேச நாடுகளையும் அதன்பின்னால் திரும்ப வைத்தது போல் தமிழீழத்தினை நோக்கிய உலகத் தமிழர்களின் ஒன்றிணை எழுச்சியானது, நிச்சயமாக ஐக்கிய நாடுகள் சபையினையும் சர்வதேச நாடுகளையும் திரும்பவைக்குமெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தின் இருக்கிற பால்டிமோர் நகரில் இடம்பெற்ற இந்த வெள்ளிவிழா நிகழ்வில், மலேசியாவில் இருந்து பினாங்கு மாகாணத்தின் துணை முதல்வர் முனைவர் இராமசாமி பழனிசாமி, தமிழகத்தில் இருந்து தோழர் நல்லகண்ணு, தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இலக்கியவாதி தமிழச்சி தங்கபாண்டியன், முனைவர் கலை.செழியன், நாட்டாரியல் ஆராய்ச்சியாளர் பிரண்டா பெக், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ, வாழும்கலைப் பயிற்சி நிறுவனர் சிறி இரவிசங்கர், இந்திய ஆட்சிப் பணியாளர் சகாயம் உட்பட பல பிரமுகர்கள் பங்கெடுத்திருந்தனர்.

Comments

Powered by Facebook Comments

Leave a Reply