ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அந்த இயக்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பெரியார் திராவிடக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேரையும் பாதுகாக்க முதல் அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
தங்களது கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் வரும் 22ஆம் தேதி எம்ஜிஆர் நகரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று வைகோ தெரிவித்தார்.
அதில் கட்சி பாகுபாடின்றி அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று உலகத்தில் உள்ள தமிழர்கள் எல்லாம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது பேரறிவாளன், சாந்தன், முருகன் படம் பொறித்த பனியன்களை அணிந்தும், பதாதைகளை ஏந்தியும் ஏராளமானோர் பங்கேற்றனர்.






Comments
Powered by Facebook Comments