யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் தங்கியிருந்ததாகவும், சிங்கள மகாவித்தியாலயமொன்று காணப்பட்டதாகவும் அதனால் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறுவதனை எவராலும் தடுக்க முடியாது என கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் பீட பீடாதிபதி கலாநிதி கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, யுத்த நிறைவின் சுதந்திரத்தை மக்கள் அனுபவிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். லக்பிம சிங்கள பத்திரிகைக்கு அளித்த விசேட நேர்காணலின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
மீள் குடியேற்றப்பட்ட மக்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் பிரயோகித்து வரும் அழுத்தங்கள் தளர்த்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மக்கள் அதிகளவு வளப்பற்றாக்குறையை எதிர்நோக்கவில்லை எனவும் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதேச மக்களுக்கு போதியளவு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் தங்கியிருந்ததாகவும், சிங்கள மகாவித்தியாலயமொன்று காணப்பட்டதாகவும் அதனால் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் மீள் குடியேறுவதனை எவராலும் தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அரசாங்கத்தின் அனுசரணையுடன் அரசாங்கத்தின் தேவைக்காக சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் குடியேற முனைப்பு காட்டினால் அது ஆரோக்கியமான நிலைமையாக கருதப்பட முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்களவர்களைப் போன்றே முஸ்லிம்களும் இடம்பெயர்ந்ததாகவும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளின் போது அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சிறுபான்மை மக்கள் தொடர்பில் கரிசனை காட்டி வருவதாக வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் இவ்வாறான ஓர் பின்னணியில் மட்டுமே தமிழ் புலம்பெயர் மக்கள் வடக்கு கிழக்கில் முதலீடு செய்ய முன்வருவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் திருத்தங்களின் மூலம் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக இந்திய வம்சாவளித் தமிழர்களும் முஸ்லிம்களும் நாடு முழுவதிலும் வியாபித்துள்ளதாகவும் புதிய தேர்தல் முறைமையினால் அவர்களின் பிரதிநிதித்துவம் அற்றுப் போகக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் தீர்வு வழங்க வேண்டும் எனவும், தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.






Comments
Powered by Facebook Comments