மன்னார் மருதமடு புனர்வாழ்வு முகாமில் உள்ள புலிச் சந்தேகநபர்கள் தமது சர்வதேச வலையமைப்பினருக்கு தகவல் வழங்கியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபாய மெதவல தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தம்மிடம் இரகசியமான முறையில் மறைத்து வைத் திருந்த 17 கையடக்க தொலைபேசிகள் உட்பட பல உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
சில கையடக்கத் தொலைபேசிகளை அவர்கள் தமக்கு தேவையான நேரத்தில் பயன்படுத்திய பின்னர் புதைத்துவைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது: -
இந்த சம்ப வத்துடன் தொடர்புடைய புலிகளின் சந்தேக நபர்கள் வெளி நாடுகளுக்கு அழைப்புகளை மேற் கொண்டுள்ளனர். இவர்கள் தமது சர்வதேச வலையமைப்பினருக்கு தகவல்களை வழங்கியிருக்கலாம் எனவும் பாதுகாப்புப் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தொலைபேசிகளில் எடுக்கப் பட்ட அழைப்புக்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கையடக்கத் தொலைபேசிகளுடன் 14 சிம் அட்டைகள் முப்பது பற்றரிகள் மற்றும் 21 சார்ஜர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. புனர்வாழ்வு முகாமில் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.அதேவேளை இது குறித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் துரிதமான விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புனர்வாழ்வு முகாம் களில் உள்ள புலிகளின் சந்தேக நபர்கள் கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.எனினும் ஒரு தொலைபேசியில் உள்வரும் அழைப்புக்களுடன் தொடர்பு கொள்வதற்கு மாத்திரம் கண்காணிப்புடன் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுவருகிறது.
அதேவேளை தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் ரணசிங்க கூறியுள்ளார். மருதமடு முகாமில் கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளமை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் இந்த முகாமில் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 500 பேருக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் சுதந்த ரணசிங்க மேலும் கூறியுள்ளார்.





